Tuesday, June 7, 2011

காயலர் உடல் நலன் ஆய்வு (KAYALPATNAM HEALTH SURVEY) பணிகள் துவக்கம்!

காயல்பட்டினத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொதுவாக ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள் குறித்து பகுதிவாரியாக ஆய்ந்தறிந்து, அதற்கேற்ப நோய்த்தடுப்பு செயல்திட்டங்களை வகுத்திடும் பொருட்டு, வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) உறுப்பினர் டாக்டர் அலீ ரஸாவின் தூண்டுதலில்ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயல்திட்டம் “காயல் உடல் நலன் ஆய்வு - KAYALPATNAM HEALTH SURVEY (KHS) 2011“.


வட அமெரிக்க காயல் நல மன்றம் (நக்வா), காயல் நற்பணி மன்றம் - தம்மாம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த ஆய்வின் முதற்கட்ட முகாம், 13.02.2011 அன்று காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில், கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளால் நடத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமின்போது நடைபெற்றது. ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா முகாமைத் துவக்கி வைத்தார். 





அனைத்துலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் ஆண்கள் பகுதியிலும், காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் குழுவினர் பெண்கள் பகுதியிலும் தன்னார்வலர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். 

உடல் உபாதைகள், அடிக்கடி ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள், உணவுப்பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட கேள்விகளடங்கிய தகவல் சேகரிப்புத் தாளில், பொதுமக்களிடமிருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டன. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, பொதுமக்களின் எடை - உயரம் ஆகியவற்றை அளந்து, அதனடிப்படையில் அவர்களுக்கு BMI பதிவு வழங்கப்பட்டதுடன், சிறப்புப் பரிசுக்கான பரிசுக்கூப்பனும் வழங்கப்பட்டது. இம்முகாமில் 94 ஆண்களுக்கும், 136 பெண்களுக்கும் என மொத்தம் 230 பேருக்கு உடல் நல ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்த முகாம்களை, பள்ளிவாசல்கள், பெண்கள் தைக்காக்கள், பொது நல அமைப்புகளின் வளாகங்கள், பள்ளி - கல்லூரிகள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தவுள்ளதாகவும், 

தொடராக மேற்கொள்ளப்படும் ஆய்வில் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காயல்பட்டினம்.காம் வலைளத்தின் முகப்புப் பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருவதாகவும், 

முகாம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், வட அமெரிக்க காயல் நல மன்ற (நக்வா) ஒருங்கிணைப்பாளருமான சாளை முஹம்மத் முஹ்யித்தீன் தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment